Monday 6 September 2010

காற்றுவெளி' சஞ்சிகை ஆதரவில் ஈழத்து நூற் கண்காட்சி!
ஈழத்து எழுத்தாளரின் நூற்கண்காட்சியில் ஓர் அறிவியல் அரங்கேற்றம்!

- திருமதி. தனபாக்கியம் குணபாலசிங்கம் (இலண்டன்) -

கவிஞர் முல்லை அமுதனின் காற்றுவெளி சஞ்சிகை ஆதரவில் ‘இலக்கிய விழாவும் ஈழத்து எழுத்தாளர்களின் எட்டாவது
நூற்கண்காட்சியும்’ இலண்டனிலுள்ள இல்பேட் புனித லூக் தேவாலய மண்டபத்தில் 10.11.2007 (சனிக்கிழமை) இடம் பெற்றிருந்தது. இவர்
இத்தகைய நூற்கண்காட்சிகளை 2002ஆம் ஆண்டு முதலாக, இலண்டன் வாழ் தமிழரின் வாசிப்பு அறிவைப் பெருக்கவும் தமிழரின்
பாரம்பரியங்களைப் புரிந்து கொள்ளவும், மற்றும் ஈழத்து எழுத்தாளர்கள் உலகில் எவர்க்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதனை
நிலைநிறுத்தும் வகையிலும் விடாமுயற்சியுடன் இப்பணியிற் தன்னை அர்ப்பணித்து வருகின்றார். இவர் இம்மாபெரும் தொண்டினைச் செய்வதற்காகத் தனது உழைப்பின் அதிக பணத்தைச் செலவளித்து இலங்கை, பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, கனடா, மலேசியா,நோர்வே, சிங்கப்பூர் முதலான ஈழத்தவர் வாழும் நாடுகளிலிருந்தெல்லாம் ஈழத்தவர் நூல்களைச் சேகரித்து வருகின்றார்.

ஈழத்து எழுத்தாளர்களிடமிருந்து நேரடியாக நூல்களைக் கொள்வனவு செய்தும் மற்றும் நாளேடுகள், மாதஇதழ்கள் முதலானவற்றிற்குச்
சந்தாப்பணம் கட்டியும் வாங்கி வருவது, ஒரு பித்தன் மடையன் என்ற பட்டங்களைப் பெறுவதற்கல்ல. இதுவொரு இனப்பற்றுடன் மிகமிகக் கண்ணியமாக முல்லைஅமுதன் பாடுபடும் ஒரு மாபெரும் பணியெனில் மிகையாகாது. குறிப்பாக இவர் தனது வீட்டில்
நிரந்தரமாக மிகப்பழைய காலம் முதல் இன்றுவரை வெளிவந்த பல்லாயிரக்கணக்கான நூல்களையெல்லாம் சேகரித்து வைத்திருப்பதுடன், மற்றோரும் தன் பணியினால் நன்மையடைய வேண்டுமென்று ஈழத்து நூற்கண்காட்சியையும் நடாத்தி; வருவதையிட்டு நாம் அனைவரும் பெருமைப்படவேண்டும்.

இனி, இவர் தன் கண்காட்சியை மாலை 3.00மணியளவில் ஆரம்பித்து பின் 6.00மணியளவில் பேச்சாளர்களின் விமர்சனங்களும்,
தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளும் இடம் பெறுமென ஊடகங்கள் மூலமாகவும் நேரடி அழைப்புகள் மூலமாகவும் அழைப்புக்கள்
விடுத்திருந்தார். நான் எனக்குக் கிடைத்த அழைப்பைப் பயன்படுத்தி மூன்று மணியளவில் தேவாலயக் கண்காட்சி மண்டபத்திற்குள்
சென்றிருந்தேன். என்ன ஆச்சரியம்!! அங்கு ஒரு அறிவியற் பெருவிருந்து ஒன்று ஒவ்வொரு ஈழத்துத் தமிழ் மகனுக்கும் காத்திருந்தது. அதாவது நான் கேள்விப்படாத ஈழத்தவர் ஆக்கங்கள் அத்தனையும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. வரலாறு, சமயஇலக்கியம், கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரைகள், அரசியல், பொருளாதாரம், தாயகப்போராட்ட எழுத்துகள்,அழகியல, சஞ்சிகைகள் என அத்தனையும் வகைப்படுத்தப்பட்டு மிக அழகாகக் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. நான் வாயடைத்து வியப்பில் மூழ்கியிருந்தேன். ஏனெனில் நான் எனக்கு ஆர்வமுள்ள துறையில் மட்டுமே 1962ம் ஆண்டு முதலாக வாங்கிப் படித்து வருவேன். ஆனால் இவரோ எல்லாத்துறை நூல்களையும் தேடித்தேடிப் பெற்றிருந்தமையே என் வியப்பிற்கு காரணமாகும். இவரிடம் உள்ள பல நூல்கள் அதனை எழுதிய எழுத்தாளர்களிடமே (என்னிடமே எனது நூல்களிலொன்று) இல்லை என்பதனையும் அத்தோடு மண்டபத்தில் வைத்திருந்த நூல்களின் தொகை அவரிடமுள்ள நூல்களின் தொகையில் நான்கில் ஒரு பங்கே என்பதனையும் அறிந்த போது என் வியப்பிற்கு அளவேயில்லை. ஏனெனில் ஈழத்தமிழர்கள் எவ்வளவு தூரம் கல்விமான்களாகத் திகழ்கின்றார்கள் என்பதனை உலகத்தமிழருக்கு அறிவுறுத்துவதற்கு மட்டுமல்ல, மட்டக்களப்பு மலைநாடு , யாழ்குடா எனும் பகுதிகளில் இலைமறை காய்கள் போல் மறைந்து வாழ்ந்து வரும் ஈழத்து எழுத்தாளர்களையும் உலக அரங்கில் அரங்கேற்றிக் கௌரவித்து வருபவர் இவர் ஒருவரே எனில் மிகையாகாது. ஆதனினால் இது ஒரு ஈழத்தமிழரின் வரலாற்றைக் கூறும் நூற்கண்காட்சி என்பதும் உறுதி.

இத்தகைய எண்ணங்களை என் மனக்கண்ணோட்டத்தில் விட்டு மகிழ்ந்துகொண்டு இருக்கையில் தொடர்ந்து பெரும் கவலை ஒன்றும்
கவ்விவாட்டத்தொடங்கியது. இவ்வரிய கண்காட்சிக்கும், சிறந்தபேச்சாளர்கள் உரைகளுக்கும், கலைநிகழ்ச்சிகளுக்கும், இரவு உணவிற்கும் வந்திருந்தவர்களின் தொகை ஒரு சினிமாத்தனமான நிகழ்ச்சிக்கும், கேலிக்கூத்துக்கும் கடும்குளிருக்குள்ளும், அலையும் எம்மவர்கள் தொகையினை விடக்குறைவே. இப்படியான அறிவுபூர்வமான நிகழ்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது சிந்திக்கத் தெரியாததால் தானோ தமிழன் அகதியாக அலைந்த படியே இருக்கின்றான்…?

இருப்பினும் மண்டபம் நிறைந்த மக்களுக்குள் இலண்டனுக்கு மிகத் தூரத்திலுள்ளஒக்ஸ்பேட்டிலிருந்து 3.00 மணிக்கே வருகை தந்திருந்த திருமதி. றீற்றா பற்றிமாகரன் அவர்கள் கண்காட்சியைக் கௌரவித்துக் கொண்டு தனக்கு ஆர்வமுள்ள நூல்களை மனமொனறிப் பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டதும், எனக்கு வள்ளுவரின் ‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ என்ற வாக்கினை நினைவு படுத்தியது. மற்றும் சட்டத்தரணி நேமிநாதன், சட்டத்தரணி சிறீஸ்கந்தராஜா,கலாநிதி. மு.நித்தியானந்தன், கவிஞர். மு.பொன்னம்பலம் திரு.பத்மநாபா ஐயர், பல்கலைக்கழக மாணவர்கள் என பலவகைப்பட்டவர்களையும் காணக்கூடியாதக இருந்தது மனநிறைவைத் தந்தது.

பின்பு மாலை 7.00 மணியளவில் கவிஞர். கந்தையா இராஜமனோகரன் தலைமையில் இலக்கியவிழா ஆரம்பமானது. மௌன
அஞ்சலியுடன் ஆரம்பித்து தொடர்ந்து செல்வி. நிவேக்கா பூபாலசிங்கம் தமிழ்த்தாய் வாழ்த்தினை உணர்வோடு பாடினார். தமையுரையைத்
தொடர்ந்து அனைவரையும் மெய்மறக்கச்செய்யும் வண்ணம் திரு. ஞானவரதனின் மாணவர்களாகிய செல்வன். திவ்வியன் உமாபதி சர்மா, செல்வன். பவித்திரன் உமாபதி சர்மா ஆகியோரின் புல்லாங்குழல் இசை பக்கவாத்தியங்களுடன் நடைபெற்றது. தொடர்ந்து செல்வி. இராகினிதேவி ஐயாத்துரை அவர்களின் மாணவர்களின் வயலின் இசை இனிமையாக இசையினை பரப்பியது.

தொடர்ந்து இலங்கையில் இருந்து சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த கவிஞரும் பிரபல எழுத்தாளருமாகிய மு.பொன்னம்பலம் அவர்கள் உரையாற்றினார். அவர் முல்லை அமுதனைப் பாராட்டிப் பேசியதோடு மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த ஈழத்து எழுத்தாளரின் திருஉருவப்படங்கள் அழகாக சட்டம் போட்டு வணக்கத்திற்காக வைக்கப்பட்டிருந்தமையையும் பாராட்டினார். அதுவும் தமிழீத்தில் மாவீரர் தினத்தை கொண்டாடும் கார்த்திகை மாதத்தில் நாமும் மறைந்த ஈழத்து எழுத்தாளரின் படங்களுக்கு வணக்கம் செலுத்துவது சாலப்பொருத்தமே. தொடர்ந்து கலாநிதி. மு.நித்தியானந்தன், கவிஞர். கரைவைக்கவி, சட்டத்தரணி. சிறீஸ்கந்தராஜா, திரு. ஐ.தி. சம்பந்தன் (ஆசிரியர் சுடரொளி), நூலகவியலாளர் திரு.ந. செல்வராஜா, திரு. பத்மநாபா ஐயர், கவிஞர். வேணுகோபால் ஆகியோர் உரையாற்றினார்கள்.

முல்லை அமுதன் வரலாற்றுச் சுவடிகளையும், ஆவணங்களையும் சேகரிக்கும் பணியானது, இன்னும் 1000 வருடங்களுக்குப் பின்னரோ
அல்லது முன்பின்னாக வரும் எம் சந்ததியினருக்கு இவைகள் சென்றடையும் என்பதில் ஐயமில்லை. மண்ணின் கீழ் பாதுகாத்து வைக்கப்பட்ட பானை ஓடுகளே பல நாடுகளின் வரலாற்றினை வெளிச்சத்திற்கு இட்டுச்சென்றுள்ளன. ஈழத்தமிழர் வரலாற்றினைக்
கட்டிக்காக்க முயன்றுகொண்டிருக்கின்ற கவிஞர் முல்லை அமுதனுக்கு எம்மாலான ஒத்துழைப்புகளையும் வழங்கி இந்நூலகத்தை நிரந்தரமாய், அழியாத தமிழ் நூலகமாக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோளாகும். இப்பணிக்காக அவர் வாழும் காலத்திலேயே நீடுழிகள் வாழ நன்றியுடன் வாழ்த்துவோமாக.

No comments:

Post a Comment