Monday 6 September 2010

ஈழத்து நூல்க்கண்காட்சியும் அதன் அசைவுகளும்.

வருடாந்தம் முல்லைஅமுதனால் நடாத்தப்படும் ஈழத்து நூல்க் கண்காட்சியுடன் கூடிய இலக்கியவிழா 2007 கார்த்திகை 10ம் திகதி இல்கேட் புனித லூக்ஸ் தேவாலய மண்டபத்தில் நடைபெற்றது. பிற்பகல் 3.00 மணிக்கு ஈழத்து நூல்களின் கண்காட்சி ஆரம்பமாகியது. நூலக அமைப்புடன் நூல்கள் வகைப்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மறைந்த ஈழத்து எழுத்தாளர்களின் புகைப்படங்களும் அழகாக சட்டமிடப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தன.

பின்பு மாலை 7.00 மணியளவில் கவிஞர். கந்தையா இராஜமனோகரன் தலைமையில் இலக்கியவிழா ஆரம்பமானது. மௌன அஞ்சலியுடன் ஆரம்பித்து தொடர்ந்து செல்வி. நிவேக்கா பூபாலசிங்கம் தமிழ்த்தாய் வாழ்த்தினை உணர்வோடு பாடினார். தமையுரையைத் தொடர்ந்து அனைவரையும் மெய்மறக்கச்செய்யும் வண்ணம் திரு. ஞானவரதனின் மாணவர்களாகிய செல்வன். திவ்வியன் உமாபதி சர்மா, செல்வன். பவித்திரன் உமாபதி சர்மா ஆகியோரின் புல்லாங்குழல் இசை பக்கவாத்தியங்களுடன் நடைபெற்றது. தொடர்ந்து செல்வி. இராகினிதேவி ஐயாத்துரை அவர்களின் மாணவர்களின் வயலின் இசை இனிமையாக இசையினை பரப்பியது. தொடர்ந்து கலாநிதி. மு.நித்தியானந்தன், கவிஞர். கரைவைக்கவி, சட்டத்தரணி. சிறீஸ்கந்தராஜா, திரு. ஐ.தி. சம்பந்தன், திரு.ந. செல்வராஜா, திரு.மு.பொன்னம்பலம், திரு. பத்மநாபா ஐயர், கவிஞர். வேணுகோபால் ஆகியோர் உரையாற்றினார்கள்.

அரிதான தேடற்கரிய நூல்களைத் தேடிப்பெற்று வகைப்படுத்திக் காட்சிப்படுத்துவதுடன் அதனை ஆவணக்காப்பகமாகவும் பேணிவருகிறார்.அதனை தங்கள் ஆய்வுகளுக்கும் பயன்படுத்துவதற்கும் உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

இவ் ஆவணக்காப்பகத்தை விரைவில் சர்வதேச அளவில் விரிவுபடுத்துவதே தன் எதிர்காலக் கனவு என்பதை முல்லைஅமுதன் குறிப்பிட்டார். பலரின் வாழ்த்துதலோடு நிகழ்வுகள் நிறைவுபெற்றது.


சுதர்சனா
லண்டன்

2 comments: